science

img

அறிவியல் கதிர்

1) புற்று நோயைக் கண்டறியும் காண்டாக்ட் லென்ஸ்
அமெரிக்க மாநிலம் கலிஃபோர்னியாவிலுள்ள டெரசாகி உயிரியல் மருத்துவக் கழக அறிவியலாளர்கள் புற்றுநோயை கண்டறியும் காண்டாக்ட் லென்ஸ் ஒன்றை வடிவமைத்துள்ளார்கள். கண்ணீரிலுள்ள நுட்பமான எக்ஸோசோம் புற்றுநோய் அறிகுறியைக் காட்டும் பயோ மார்க்கராக பயன்படக்கூடியது. இந்த எக்ஸோசோம்களை காண்டாக்ட் லென்ஸ் கண்டறியும் தன்மை கொண்டது.பலவித புற்றுநோய்களுக்கான அதிக செலவில்லாத முன்பரிசோதனை திட்டமாக இது பயன்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

2) கசப்பான தர்ப்பூசணி இனிப்பானது
6000 ஆண்டுகளுக்கு முன் விளைந்த தர்ப்பூசணிப் பழங்கள் கசப்புச் சுவை கொண்டதாகவும் உட்கொண்ட மனிதர்களுக்கு மரணம் விளைவிக்கக்கூடியதாகவும் இருந்திருக்கும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.நமது முன்னோர்கள் பழத்தின் சிவந்த சதை பகுதியை நீக்கிவிட்டு விதைகளை மட்டும் உண்டார்கள். தானாக விளைவதிலிருந்து  விவசாயத்திற்கு மாற்றப்படும்போது பழங்கள் தங்களது சில இயல்புகளை இழக்கின்றன.அது போல் தர்பூசணியின் கசப்பு சுவை மாறியிருக்கும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

3)மலர்களின் வடிவங்களும் ஒட்டுண்ணி தொற்றும்
வண்டுகள் பூக்களில் தேனை உறிஞ்சும்போது அதிலுள்ள பூச்சி எச்சங்களும்  வண்டுகளின் வயிற்றினுள் சென்றுவிடுகின்றன.அதிலுள்ள குடற்புழுக்கள் வண்டுகளின் இயக்கத்தை பாதிக்கின்றன. இது குறித்த ஆய்வில் நீண்ட குறுகலான பூக்களை விட சிறிய அகலமான பூக்களில் இந்தப் புழுக்கள் தொற்றும் அபாயம் அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்க நார்த் கரோலினா மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரெபக்கா இர்வின் செய்த ஆய்வில் 16 வகை தாவரங்களில் மூன்று காரணிகளை ஆராய்ந்தார்கள்.வண்டுகள் பூக்களில் இடும் எச்சங்கள் அளவு, அதிலுள்ள ஒட்டுண்ணி பிழைத்திருக்கும் காலம்,அது மற்ற வண்டுகளை எளிதாக தொற்றுவது ஆகிய மூன்றையும் சேர்த்து பார்க்கும்போது தொற்றின் விகிதம் தெரிய வருகிறது. மகரந்தச் சேர்க்கைக்கு உகந்த தோட்டங்களையோ அல்லது ஒரு பகுதியில் தாவரங்களின் மறுமலர்ச்சித் திட்டங்களுக்கோ எந்த செடிகள் உகந்தது என்று முழுமையாக தெரிந்து கொள்ள தேவையில்லை. பூக்களின் அமைப்பிலிருந்தே நோய்கள் பரவுவதை தெரிந்து கொள்ளலாம். மேலும் பலதரப்பட்ட செடிகளை நடுவதன் மூலமும் நோய் பரவுவதை தடுக்கலாம்.

4) நரம்பு மண்டல நோயும் வைரஸும்
மனித உடலில் உள்ள நோய் தடுப்பு அமைப்பு சில நேரங்களில் ஆரோக்கியமான திசுக்களையே அழித்துவிடுவது உண்டு. இதை autoimmune disorder என்கிறார்கள். இதற்கு மரபணுக்கள், சுற்று சூழல் காரணிகள் ஆகியவை காரணங்கள் எனக் கருதப்பட்டு வந்தது. Epstein-Barr எனப்படும் சாதாரணமான வைரஸ் கிருமியும் இந்த கோளாறுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்தது. இந்த வைரஸை எதிர்க்கும் நமது நோய் எதிர்ப்பு அமைப்பு நம்முடைய மைய நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் 1964ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.பெரும்பாலான மனிதர்களை இது தாக்குகிறது.சிறார்களுக்கு மிதமான சளி அல்லது எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை.பதின்பருவத்தினருக்கும் இளவயது மனிதர்களுக்கும் வாரம் அல்லது மாதக்கணக்கில் கடுமையான அசதி இருக்கும்.இந்த அறிகுறிகள் மறைந்துவிடுகின்றன. ஆனால் வைரஸ் நம் உடலில் தங்கிவிடுகிறது. இந்த வைரஸ் அக்கி,அம்மை போன்ற நோய்களுக்கு காரணமான வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. அந்த வைரஸ்களும் இதேபோல் நம் உடலில் தங்கும் தன்மை கொண்டன. இபிவி (EBV) வைரஸ் தொற்றியவர்களுக்கு நரம்பு மண்டலக் கோளாறு ஏற்படுகிறது.மற்றவர்களுக்கு ஏற்படுவதில்லை.இந்த அடிப்படையில்  10 மில்லியன் அமெரிக்க ராணுவ வீரர்களின் ரத்த மாதிரிகள் 1993 முதல் 2013 வரை  மீண்டும் மீண்டும் பரிசோதிக்கப்பட்டன. இவர்களில் 801 நபர்கள் இபிவி வைரஸ் தொற்றுக்கு  ஆளாகி இருப்பதும் அவர்களுக்கு  நரம்பு மண்டல் கோளாறுகள் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.    நமது நரம்பு மண்டலத்திலுள்ள கிளையல் காம் எனும் புரோட்டீனிலுள்ள மூலக்கூறும் வைரஸிலுள்ள மூலக்கூறும் ஒத்திருப்பதால் நமது நோய் எதிர்ப்பு அமைப்பிலுள்ள ஒருவகை புரோட்டீன் நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது.நரம்பு செல்கள் சமிக்கைகளை அனுப்புவதற்கு உதவும் மயலின் என்பது இதில் சேதமடைகிறது. எனவே இந்த வைரஸின் புரோட்டீனை தடுப்பூசிகளில் பயன்படுத்துவது சரியான முறையாக இருக்காது என்கிறார் இந்த ஆய்வை நடத்தியவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியலாளர் ஸ்டெய்ன்மென். இந்தக் கண்டுபிடிப்பு இபிவி வைரஸுக்கு தகுந்த சிகிச்சையும் அவை ஒளிந்திருக்கும் செல்களை அப்புறப்படுத்தவும் multiple sclerosis எனும் நரம்பு மண்டல நோயைக் குணப்படுத்தவும் உதவும்.

5) தானியங்கி பனிக்கோபுரங்கள்
இந்தியாவிலுள்ள லடாக்கிலும் சிலி,கிர்கிஸ்தான் நாடுகளில் உள்ள மலைப் பகுதிகளிலும் மழைப்பொழிவு மிக குறைவாக உள்ளது. இங்கு விவசாயத்திற்கு பனிப்பாறைகள், பனி, உறைபனி ஆகியவை உருகி வரும் நீரையே நம்பி உள்ளனர்.மாறிவரும் தட்பவெப்ப நிலைமைகளில் இவை நம்பிக்கையான ஆதாரங்களாக இல்லை. இங்கு மக்கள் தண்ணீரை மேலே நீரூற்று போல பீச்சி அடித்து அவைஉறைந்து கோபுரம் போன்ற அமைப்புகளாக மாறுகின்றன.பின் தேவைப்படும்போது அவற்றிலிருந்து நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.இந்த முறையில் குளிர்காலத்திலும் தண்ணீர் ஓடுவதும் அல்லது உறைந்து போய் குழாய்கள் அடைத்துக் கொள்வதும் ஏற்படுகின்றன.இதே முறையை தானியங்கி முறையில் மாற்றி குறைவான நீரைக் கொண்டே பனிக்கோபுரங்களை அமைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் உள்ள ஃபிரீபோர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பனிக்கட்டித்துறை நிபுணர் பாலசுப்ரமணியன் மற்றும் அவரது குழுவினர் வானிலை தரவுகளைக் கொண்டு பீ ச்சப்படும் நீரின் அளவு,காலம்,நேரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி குறைவான நீரைக்கொண்டு பனிக் கோபுரங்களைக் கட்ட முடியும் என்று காட்டியுள்ளனர். இவை கோடைகாலத்தில் மட்டுமல்ல அடுத்த ஆண்டு வரையிலும் கூட நீர் அளிக்க வல்லவை.குளிர்காலத்தில் பராமரிக்கவும் தேவையில்லை.ஆனால் இப்போது மனித உழைப்பினால் பனிக்கோபுரங்களை உருவாக்கும் விவசாயிகளின் நிதி நிலமைக்கு இந்த தானியங்கி முறை கட்டுபடியாகாது என்று பாலசுப்ரமணியன் கூறுகிறார்.

 

;